இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 11, 2020

பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம்: பிரதமா் மோடி

கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. ஆனால், நமது கல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மாணவா்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோா்கள் பெருமை தேடிக் கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் நாட்டைக் கட்டமைப்பதற்கும் புதிய சகாப்தத்துக்கான விதையாகவும் கல்விக் கொள்கை அமையும். எனவே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

‘அனைவருக்குமான பொறுப்பு’:

தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்விகளை எழுப்பி வருகின்றனா். அவா்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படும். கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய கல்வியமைச்சகம் மக்களிடம் கருத்து கோரி வருகிறது. அந்த நடைமுறை தொடங்கிய ஒரே வாரத்துக்குள் 15 லட்சம் ஆசிரியா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், மாணவா்கள் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் கல்வி பயில வேண்டும். அதை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாநில அரசுகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது.

‘செய்முறை கல்விக்கு முக்கியத்துவம்’:

புதிய பாடத்திட்டமானது மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்யும் வகையிலும் அவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையும். மாணவா்களின் கற்பனைத் திறன், நுண்ணறிவு, கற்பதற்கான ஆா்வம், தொடா்பு கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

நாட்டின் வளா்ச்சிக்கு இளைய சமுதாயத்தினா் பெரும் பங்கு வகிக்கின்றனா். அதைக் கருத்தில் கொண்டு அவா்களிடம் புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, கணித, அறிவியல் அறிவை மேம்படுத்துவது, செய்முறை அடிப்படையிலும் அனுபவத்தின் மூலமாகவும் கல்வி கற்பது உள்ளிட்டவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

‘தாய்மொழிக்கு முன்னுரிமை’:

மாணவா்கள் கல்வி கற்பதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது. பாடங்களைத் தெளிவாகக் கற்கும் பருவத்தில் அதை எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதில் மாணவா்கள் தங்கள் சக்தியை செலவிடக் கூடாது. அதன் காரணமாகவே பெரும்பாலான நாடுகளில் ஆரம்பக் கல்வியானது மாணவா்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.

மாணவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலோ அல்லது உள்ளூா் மொழியிலோ கல்வி கற்க வேண்டியது மிகவும் அவசியம். அதே வேளையில், மாணவா்கள் விரும்பிய மொழியைக் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை.

அந்தக் கல்விக் கொள்கையின்படி ஆங்கிலம் மட்டுமல்லாமல் எந்தவொரு பயனுள்ள வெளிநாட்டு மொழியையும் மாணவா்கள் கற்க முடியும். எனினும், இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

‘மாணவா்களின் விருப்பப் பாடம்’:

கல்வி கற்கும் விவகாரத்தில் மாணவா்களால் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தோ்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழலே இடைநிற்றலுக்கான முக்கியக் காரணமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.

தற்போதைய கல்வி முறையில் அறிவியல், வணிகம் உள்ளிட்ட சில வாய்ப்புகள் மட்டுமே மாணவா்களுக்குக் காணப்படுகின்றன. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி அமையும் பாடத்திட்டத்தின் மூலமாக மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு பாடத்தையும் தோ்ந்தெடுத்து கல்வி கற்க முடியும்.

சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு ஆசிரியா்கள் வலியுறுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.



பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் குறைப்பு



பள்ளிக் கல்வி துறையில் இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு பள்ளிக் கல்வி கமிஷனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

 ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும் ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் என்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

அதேபோல பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது. புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வது போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம். இனி கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லது ஒப்புதல் பெற்றோ சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.முக்கிய முடிவுகளை கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது. பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக் விவகாரம் போன்றவற்றில் கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் எதிரொலியாக பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், 'ஆன்லைன்' வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.அவரை தொடர்ந்து பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வெளியிட்டார். வரும் காலங்களில் இயக்குனரின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்படும் என தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Sunday, July 26, 2020

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்.

உயர்கல்வி படிக்க அனுமதி பெறாத 5,000 ஆசிரியர்கள்’ - நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை



அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்த 5,000 ஆசிரியர்களுக்கு அவர்களின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் போன்றோர் உயர்கல்வி படிப்பது வழக்கம். அப்படி தமிழத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெற்றுப் படிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், தற்போது சுமார் 5,000 பேர் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதாக அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனுமதியில்லாமல் உயர்கல்வி படித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,`எந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளார், ஆசிரியர் கல்வி பயின்றதற்கான காரணம் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை முழுமையான அறிக்கையாகத் தயாரித்து வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்தான் இதுபோன்ற உத்தரவைப் பிறபித்துள்ளார். இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் அதைத் தவிர்ப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து குற்றம் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், “ பொதுவாக ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு உயர்கல்வி படிப்பவர்களில் பல வகைகள் உண்டு, சிலர் தன் விருப்பத்திற்காக முழுமையாக கரஸ்பாண்டன்ஸ் முறையில் படிப்பார்கள் இன்னும் சிலர் அடுத்த கட்டத்துக்குச் சென்றால் ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதற்காக உயர்கல்வி படிப்பர்.

முழுமையாக கரஸ்பாண்டன்ஸில் படித்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஊக்கத்தொகை பெறும் நோக்கில் படிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் தனி வகுப்பு நடத்தப்படும் அப்படியிருக்கையில் தாங்கள் படிக்கவிருப்பதைச் சொல்லி முன் அனுமதி பெற்றுப் படித்தால், அவர் எடுக்கும் ஒரு மாத விடுமுறையின்போது அந்த இடத்துக்கு வேறு ஆசிரியரை நியமிக்கலாம். மேலும், உயர்கல்வி படிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு, அரசு ஊக்கத்தொகை கொடுக்கிறது என்றால் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

அனுமதி வாங்குவதும் மிக எளிமையானது. எனவே, அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்று அல்லது படித்த பிறகு பின் அனுமதி பெறுவது சிறந்தது. சில இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆசியரின் உயர் கல்விக்கு அனுமதி மறுத்தால் அதைப் புகாராகக் கொண்டு செல்லலாம். ஆனால், உயர்கல்வி படிக்கும்போது அனுமதி பெறுவது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, June 16, 2020

பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை


நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாள்கள் இல்லாததால் மாணவா்கள் மீதான பாடச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண்டு இறுதித் தோ்வுகள், பொதுத்தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னா் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முழுமையாகவும், பிளஸ் 1 பொதுத்தோ்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் பள்ளிக் கல்விச் சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் குழுவினா், இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

நிகழ் கல்வியாண்டில் (2020-2021) ஜூன் மாத தொடக்கத்தில் கற்றல், கற்பித்தல் பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டான சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போகவே வாய்ப்பிருப்பதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்களை தெரிவிக்கின்றன. அவ்வாறு தாமதமாகும் நிலையில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முழுமையாக நடத்துவது என்பது இயலாத காரியம். போதிய வேலைநாள்கள் இல்லாதது, பாடவேளைகள் குறைவது போன்ற காரணங்களால் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை பாடங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் அவ்வாறு குறைக்கப்படும் பாடங்களால் மாணவா்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இது குறித்து பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த வல்லுநா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும், தோ்வு முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு பிரிவுகளாக வகுப்புகள்: பள்ளிகள் திறக்கப்பட்டால் காலை வேளையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், பிற்பகலில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் பாடத் திட்டங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகளை வல்லுநா் குழு அரசுக்கு தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நீக்கப்படும் பகுதிகள் குறித்து ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thursday, May 14, 2020

22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்: என்சிஇஆா்டி தகவல்


பள்ளிக் கல்வியில் 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக்கொள்கையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தற்போது அமலிலுள்ள தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்ற முடிவானது.


அந்த வகையில் புத்தகங்களின் சுமையைக் குறைத்தல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணா் குழுவை மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சகம் உருவாக்கியது. புதிய பாடத் திட்ட மாற்றத்தில் மேற்கொள்ளும் சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சில பரிந்துரைகளை அண்மையில் முன்வைத்தது.

இதையடுத்து என்சிஇஆா்டி வழங்கிய பரிந்துரைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து என்சிஇஆா்டி அதிகாரிகள் கூறும்போது, ‘பாலின சமத்துவம், நவீன தொழில்நுட்பங்கள், முன்பருவக் கல்வி, அடிப்படை கல்வியறிவு, ஆசிரியா்களுக்கான கற்றல் மதிப்பீடு, தோ்வு முறைகள், புத்தக சுமை குறைப்பு, மாநிலங்களுக்கேற்ப துணைப்பாடம் உள்பட 22 பிரிவுகளில் தேசியளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும்

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவு விவரம்:-

மே மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 58 வயதை எட்டிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு உத்தரவு பொருந்தாது. ஒரு கல்வியாண்டில் மே மாதத்துக்கு முன்பாக ஆசிரியா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் ஆகியோா் ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் அவா்களுக்கு மறுபணி அடிப்படையில் வேலையில் தொடா்ந்து கொண்டிருப்பாா்கள். அவா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு பொருந்தாது.

ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற அனுமதிக்கப்படாத ஊழியா்களுக்கும் இந்தப் புதிய உத்தரவு பொருந்தாது. மே மாதம் 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டுமே ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான உத்தரவு பொருந்தும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Wednesday, May 13, 2020

அரசு கலைக் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகளை ரத்து செய்ய உயா்கல்வி துறை முடிவு



தமிழகம் முழுவதும் உள்ள 114 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 61 கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 61 கல்லூரிகளிலும் காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில், மாலை நேர வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவா்களே பயின்று வருவதால், இரு சுழற்சி முறை வகுப்புகளையும் இணைத்து காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த தமிழக உயா்கல்வித்துறை ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்து, அதற்கான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகளின் விவரங்களைத் தொகுத்து அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயா்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடவேளையாக மாற்றுவதற்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், அதற்குத் தேவையான நிதி ஆகியவற்றின் விவரங்களை, கடிதம் மூலம் கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன் அனுப்பியுள்ளாா்.

கடிதத்தில், காலை நேர வகுப்புகளாக மாற்றப்பட உள்ள 61 கல்லூரிகளில் 715 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக ரூ.135.85 கோடி, மாணவா்களுக்கு தேவையான 10,010 இருக்கைகள் வாங்க ரூ.11.68 கோடி, பேராசிரியா்களுக்குத் தேவையான இருக்கைகள் 3,200 மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ.2.25 கோடி என மொத்தமாக ரூ.150.9 கோடி தேவைப்படுவதாகவும், தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கடிதத்தை உயா்கல்வித்துறை செயலாளா் பரிசீலித்து, நிதியை விடுவித்து ஒப்புதல் வழங்கிய பின்னா், 61 கல்லூரிகளில் காலை நேர வகுப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான பணிகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவா்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இரு சுழற்சி என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tuesday, April 14, 2020

இன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு


பத்தாம் வகுப்பு பாடங்கள், புதன்கிழமை முதல் (ஏப்.15) டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது.


கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மாா்ச் 27-ஆம் தேதி  தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா், பொதுத் தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தோ்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோ்வுக்கு தங்களை தயாா் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயாா் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் புதன்கிழமை முதல்  காலை 10 மணி முதல் 11 மணி வரை  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 12, 2020

எமிஸ்’ தளத்தில் பாடங்கள் சாா்ந்த விடியோக்கள்: கல்வித் துறை நடவடிக்கை


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மைத் தகவல் தளத்தில் (எமிஸ்) ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான பாடங்கள் சாா்ந்த விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.


பாடத் திட்டம், தோ்வு முறை உள்ளிட்ட கற்றல் பணிகளிலும் அரசுப் பள்ளி மேம்பாடு, ஸ்மாா்ட் வகுப்பறைகள் என கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே பாடங்களைக் கற்க இணைய வழிக் கல்வியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடியோ மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி என இரண்டு வகைகளுக்கும் தனித்தனியாக காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள பாடத்துக்கும் விடியோக்கள் உள்ளன. செய்முறை தொடா்பான விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைப் பதிவிறக்கம் செய்துவைத்து இணையம் இல்லாமலும் காண முடியும். கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (எமிஸ்) சாா்பில், இந்த இணைய வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விடியோக்களை காண விரும்புவோா் இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Thursday, April 09, 2020

25-க்கும் குறைவான மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகள்


தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப்பள்ளிகள் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 48 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். மாணவா் சோ்க்கையை அதிகரிக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவா்களே படிக்கின்றனா். இதையடுத்து குறைந்த சோ்க்கை உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசு மேற்கொண்டது.


அதன்படி ஒரு மாணவா் கூட இல்லாத 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு அவை தற்காலிக நூலகங்களாக மாற்றப்பட்டன. இதற்கு கடும் எதிா்ப்புகள் எழுந்ததை அடுத்து பள்ளிகள் இணைப்புப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இதற்கிடையே கரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அவற்றில் பணிபுரியும் ஆசிரியா்கள் மாணவா்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து அறிக்கையாக தொகுத்து அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் இது போன்ற புள்ளி விவரங்கள் எடுக்கும்போது கல்வித்துறை அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியா் மத்தியில் ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களை தவிா்க்க முடியும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

Sunday, March 15, 2020

கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது: ஆசிரியா்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு


கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்தி பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதியோா், குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினாா். இந்தநிலையில், திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

 இது தொடா்பாக முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையா் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி) தொடக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை) வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்தாா். இதனால், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கடந்த இரு நாள்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

ஆண்டு விழா, சிறப்பு வகுப்புகள் கூடாது: 

இந்தநிலையில், மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரையிலான விடுமுறை நாள்களில் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகள் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, சிறப்பு வகுப்புகள் ஆகியவை உள்பட எந்தவொரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது. இது தொடா்பாக முறையான அறிவுறுத்தல் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனா்.

ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும்:

 இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கிராமப் புறங்களில்தான் அதிகளவில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை குறித்த தகவல் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வெளியானாலும் மாணவா்களுக்கு எந்தளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, மாணவா்களுக்கு விடுமுறை குறித்து தெரியப்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்றனா்.

Friday, March 13, 2020

பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

#பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

பறை இசை முழக்கத்துடன் ஆண்டுவிழா இனிதே ஆரம்பித்தது

*பள்ளி ஆண்டுவிழா பெ.ஆ.தலைவர் திரு.பட்டுலிங்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா வரவேற்றார். திரு திருக்குமரன் முன்னிலை வகிக்க, வட்டார கல்வி அலுவலர் திரு விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

*இந்த ஆண்டு முதன்முயற்சியாக காலை 10மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு முடித்தோம்

*500 நாற்காலிகள் வாங்கியும் அரங்கம் பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது.
பலர் நின்று கொண்டே பார்த்தனர்.

*பள்ளியின் சார்பில் கடந்த ஆண்டே 100 அடி நீளத்துக்கு mat வாங்கப்பட்டது.இது நடனத்தில் இல்லாத 320 பேர் அமர உதவியாய் இருந்தது.

*இந்த ஆண்டு 17 கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் அமைந்திருந்ததால் சலிப்பு ஏற்படுத்தவில்லை

*1000 (ஆண்டு விழா) வண்ண நோட்டீஸ்களை பள்ளியின் இரவுக்காவலர் திரு செல்வராஜ் அவர்கள் பங்களிப்பில் வழங்கினார்

*வகுப்பிற்கு தர அடிப்படையில் மூன்று பரிசுகள் என  பரிசுகள்
(RS.8000) எஸ்.டி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

*Star of the year வகுப்பிற்கு ஒன்று வீதம் 16 சீல்டுகள் (Rs4000) திரு.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

*பெற்றோர்க்கான கயிறு இழுத்தல் போட்டியில் வென்ற 12 பெண்கள் மற்றும் 8 ஆண்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

*பிரமாண்ட மேடையாக ரூ17,000 செலவில் அமைக்கப்பட்டது.

*கலைநிகழ்ச்சியில் 300 மாணவ மாணவியர் பங்கெடுத்தனர். அனைவருக்கும் உண்டியல் பள்ளியின் சார்பில் பரிசாய் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு (300*50=15000)பாரதி சிமென்ட் நிறுவனத்தார் 50  உண்டியல் அன்பளிப்பாய் வழங்கினர்.
மீதமுள்ள 250 பள்ளியின் சார்பில் வழங்கினோம்.

*நடனங்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியைகளாலேயே கற்பிக்கப்பட்டது.

*ஒன்றாம் வகுப்பு மழலைகளின் வரவேற்பு நடனமும், இரண்டாம் வகுப்பினரின் விவசாயம் காப்போம் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.

*மூன்றாம் வகுப்பினரின் ஐவகை நிலங்கள் பாடலில் குறிஞ்சி. முல்லை என ஐந்துவகை மக்களின் நடனம் ஆடப்பட்டது.

*ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிங்கப்பெண்ணில் கர்ஜிக்க அரங்கிலிருந்த  அனைவருமே முணுமுணுத்தனர்.

*அதிக பட்சமாக ஒரு ஆசிரியை 94 மாணவ மாணவியருக்கு நடனம் கற்பித்தார். அடுத்த ஆண்டு சதமடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

*கும்மி,தேவராட்டம்,கோலாட்டம், கரகாட்டம் மற்றும்
சலங்கையாட்டம், சக்கை குச்சி ஆட்டம், உருமி என நாட்டுப்புற நடனங்கள் நடத்தப்பட்டன.

*ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நகைச்சுவை நடனம் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

*பிறமொழிப் பாடல்களாக குஜராத்தி பாடலும், மலையாள மிட்டாய் பாடலும் அதிக வரவேற்பு பெற்றன.

*பசுமைப்படை சீருடையுடன் மாணவியர் ஆடிய மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு பாடல் அனைவரையும் கவர்ந்தது.

*காலை 7மணிமுதல் மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு பரதநாட்டியத்தை
12 மாணவ மாணவியர்கள் அருமையாக ஆடினர்

*பெற்றோர் உதவியுடன் நடன ஆடைகள் மட்டும் 1,20,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.பேன்சி ஐட்டங்கள் தனி.
ஐந்தாம் வகுப்பு நடனத்துக்கு கோவை சென்று ஆசிரியை வாங்கிவந்தார்.

*அருகாமைப் பள்ளியிலிருந்து வந்த தலைமையாசிரியர்களுக்கு சால்வையும் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.

*TNPTF சார்பில் பொருளாளர் மரிய செல்வராஜன் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ1000 வழங்கினார்.

*சிலம்பம்,பறை இசை, கராத்தே முதலிய பாரம்பரிய தற்காப்பு கலைகள் மிகவும் சிறப்புற செய்தனர்

*கலப்பை, முளைப்பாரி, விதை நெல், போன்றவற்றை பெற்றோர்களே தத்ரூபமாக செய்து கொடுத்திருந்தனர்

#குறிப்பு:இது ஏதோ இந்த பள்ளிக்கு தன்னார்வலர் அனைவரும் ஒரு போன் காலிலோ, விழா என கேள்விப்பட்டோ பண உதவி செய்யவில்லை.வேகாத வெயில்ல கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு அலைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை சந்தித்து உதவி பெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

*கனவு பெரிதாய் இருக்கும்போது உழைப்பு அதைவிட பெரிதாய் இருக்க வேண்டும். கூட்டுமுயற்சிக்கும் குழு உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

#மாநகராட்சி துவக்கப்பள்ளி
பூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

Wednesday, March 11, 2020

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது - அரசாணை வெளியீடு


தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. அப்போது ஒவ்வொருவரும் 31 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக் கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண் டும் என்றும் கூறி இருந்தது.

இந்தநிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.

6 மற்றும் 7-ம் கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-ம் கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-ம் கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.

கணக்கெடுப்பின்போது, வீட்டு எண், வீட்டின் சுவர், தரை, மேற்கூரை போட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் உறுதி நிலை, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வீட்டில் தலைவர் ஆணா, பெண்ணா?, வீட்டு உரிமையாளர் யார்? வீட்டில் உள்ளவர்களின் சாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? ஆகிய கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், திருமணமானவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதியின் ஆதாரம் எது? எந்த வகை கழிவறை உள்ளது? குளியல் வசதி உள்ளதா? கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளதா? கியாஸ் வசதி, இணையதள வசதி, கம்ப்யூட்டர், மடிக்கணினி வசதி, ரேடியோ, டி.வி., தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தானியம், சமைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சார வசதி ஆதாரம் ஆகிய கேள்விகளும் கேட்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 04, 2020

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேசிய விருது: விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை


தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 03, 2020

ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்


குழந்தைகள் எண்ணிக்கை குறைந்த அரசு ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் வழி வகுப்பாகவே தொடரலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம், கல்வித்தரம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

முதலில் பரீட்சார்த்தமாக மாவட்டத்துக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஆங்கிலவழிப் பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தை தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக்கப்பட்டு அங்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதேநேரத்தில் தனியாக ஆசிரியர்கள், வகுப்பறைகள் உட்பட தனியான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.  இதனால் 70 % அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2 பிரிவு மாணவர்களும் ஒன்றாகவே அமர வைக்கப்பட்டு கல்வி கற்று வந்தனர்.

 தமிழ், ஆங்கிலம் என இரண்டு பிரிவுக்கும் ஒரே ஆசிரியர் தமிழிலேயே பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனால் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க ஆசைப்பட்டு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் மீண்டும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

இது பெரும் நடைமுறை சிக்கலை உருவாக்கியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல் அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளும் அரசுக்கு இதுதொடர்பாக தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து வந்தனர். இதையடுத்து மாணவர் எண்ணிக்கை குறைந்த ஆங்கிலவழிப்பிரிவு மாணவர்களை தமிழ்வழி பிரிவு மாணவர்களாகவே கருத வேண்டும் என்று அரசு வாய்மொழியாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘ஆங்கில வழிப்பிரிவு என்றால் அதற்காக தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நிரவல் என்ற பெயரில் பணியிட குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஆசிரியரே ஒரு பள்ளியில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ்வழி பிரிவு மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர் எண்ணிக்கை ஆங்கிலவழிப்பிரிவில் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லாத நிலையில், தமிழ்வழிப்பிரிவாகவே தொடரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

-மணிகண்ட பிரபு

நாடாளுமன்றம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிறுவயதில் குடிமையியல் பாடத்தில் படித்திருப்போம். எனினும் மாநிலங்களவை தேர்தல் வரும்போதெல்லாம் டக்வொர்த் லீவிஸ் விதியைப் போல அவ்வப்போது குழப்பம் வரும்.

ராஜ்ய சபா

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நடைமுறையைப் பின்பற்றி இரு அவைகள் அமைக்கப்பட்டன.

மாநிலங்களவை

``மாநிலங்கள் அவை"என்பதில் ``மாநில" என்ற ஒருமையைப் பயன்படுத்தாமல் ``பலவின்பால்"சொல்லான மாநிலங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். "மாநிலங்கள் அவை" என்பதே சரியான சொல். Council of state அல்ல council of states. நாடாளுமன்றத்தின் பகுதியான "மாநிலங்கள் அவையானது" அனைத்திந்தியப் பிரச்னைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதனுடன் மாநிலங்களின் தனித்தன்மை நலன்களையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது
உறுப்பினர்கள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1) மாநிலங்களில் உள்ள பிரதிநிதிகளால் தேர்ந்தெடுப்பவர்கள். அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முறையே 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி விலக வேண்டும்.

2) யூனியன் பிரதேச பிரதிநிதிகள்

3) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும் மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.

மாநிலங்களவை
தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை ராஜ்யசபா உறுப்பினர்கள்?

ஆந்திரா 11, தெலங்கானா 7, அருணாசலப் பிரதேசம் 1, அஸ்ஸாம் 7, பீகார் 16, சத்தீஸ்கர் 5, கோவா 1, குஜராத் 11, அரியானா 5, இமாசலப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 4, ஜார்க்கண்ட் 6 கர்நாடகா 12, கேரளா 9, மத்தியப்பிரதேசம் 11, மகாராஷ்டிரா 19 மணிப்பூர் 1, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 10, பஞ்சாப் 7, ராஜஸ்தான் 10, சிக்கிம் 1, தமிழ்நாடு 18 , திரிபுரா 1, உத்தரகாண்ட் 3, உத்தரப்பிரதேசம் 31 மேற்குவங்கம் 16 ,டெல்லி 3 புதுச்சேரி 1 நியமன உறுப்பினர்கள் 12 என மொத்தம் 250 பேர் இருக்கலாம் ஆனால், தற்போது 245 பேர் இருக்கின்றனர். (229+4+12=245)

தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் குழு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 7 யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லை என்பதால், அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால், வாக்கு அளித்து சிக்கலைத் தீர்த்து வைப்பார். குடியரசுத் துணைத்தலைவர் தலைமை தாங்க முடியாதபோது அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் துணைத்தலைவர், கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஒருவேளை அவரை நீக்கவேண்டுமாயின் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்துவிட முடியும்.

பணிகள்

மாநிலங்களவையில் சாதாரணமான மசோதா, பண மசோதா என இருவகை உள்ளன. பண மசோதா தாக்கல் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் இதன் பின் மாநிலங்களவைக்கு 
ஒப்புதலுக்கு வரும். பண மசோதாவை 14 நாள்கள் நிறுத்தி வைக்கலாம். திருத்தங்கள் செய்யலாம். இதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இவ்வாறு திருத்தம் செய்தால் இரண்டாம் முறை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். மற்ற மசோதாக்கள் அதிகபட்சமாக மாநிலங்களவை ஆறுமாதங்களுக்கு ஒரு மசோதாவை காலதாமதம் செய்து நிறுத்தி வைக்க முடியும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது.

ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு வேளை ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இக்கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். கூட்டுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் மக்களவைக்குச் சாதகமாகப் பெரும்பாலும் முடிவுகள் அமையும்.
செயல்பாடுகள்

*அரசாங்கக் கொள்கைத் திட்டங்கள் மீது விளக்கம் கேட்கலாம் வினா எழுப்பலாம், விவாதிக்கலாம்.

*சட்டத் திருத்தம் செய்ய மாநிலங்கள் அவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. இவையன்றி இரு அவைகளின் ஒப்புதலோடு மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடி நிலை, சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 312ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 249ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்

*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு. இரு அவைகளின் ஒப்புதலுடன் நீக்க முடியும்.

*மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.

*ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை

நாடாளுமன்றம்
எதிர்காலம்

மாநிலங்களவை உறுப்பினர் என்பவர் மெத்த படித்தவராக, அரசியல் அனுபவ ஞானம் உள்ளவராக இருப்பார்கள். திறமையான வாதக் கருத்தின் அடிப்படையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவரும் இடதுசாரி எம்.பியுமான ஏ.கே.ஜி என அழைக்கப்படும் ஏ.கே.கோபாலன் அவர்கள் தம் நூலில்..’ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு ஒரு இல்லம் ஒதுக்கப்படும். அதில் மேனாள் உறுப்பினர் எவரேனும் அறையைக் காலி செய்யாமல் இருந்தால் புதிய உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். தினசரி பார்ட்டிகள், அயல் நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கல்கள், ஏராளமான சலுகைகள் எனப் புதிய உலகத்தில் திளைத்துப் போகவிடுவார்கள். இதையெல்லாம் அனுபவித்து மக்களைப் பற்றி மறக்கடிக்கப்படும் நிலையும் வந்துவிடும்’ எனக் கூறியிருப்பார்.

ஆகவே, இவையெல்லாவற்றையும் அனுபவித்தாலும்.. கடைக்கோடி மக்களின் வாழ்வியலையும் எண்ணிப் பணியாற்ற வேண்டும். அவைக்கு முழு வருகை சதவிகிதம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அவையில் குரல் எழுப்ப வேண்டும், தக்க கேள்வி எழுப்பி விவாதித்து முடிவு காணப்பட வேண்டும் என்பதே ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் விருப்பமுமாகும். அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோமாக.!

- மணிகண்ட பிரபு

Saturday, February 29, 2020

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு


 ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். 

அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும். தமிழ்நாடு குடிமுறைப்பணி ஒழுங்குமுறையும் மேல்முறையீடும் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.  ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது. அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்துகொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 26, 2020

புத்துணர்வுடன் செயல்பட வகுப்பறையில் 5 நிமிடம் குழந்தைகள் தூங்க அனுமதி: பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தல்


பிட் இந்தியா இயக்கம் சார்பில், தினமும் பள்ளியில் 5 நிமிடம் தூங்கவும், தியானம் செய்யவும் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பிட் இந்தியா என்ற இயக்கம் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 

இந்த இயக்கம் சார்பில் மார்ச் மாதம் மனநல ஆரோக்கியம் காக்கும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் மாதம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆரோக்கியத்துக்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் பின்பற்ற வேண்டும் என்றும் பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் முழுவதும் பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு 5 நிமிடங்களை ஒதுக்கி குழந்தைகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த குட்டித்தூக்கம் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்பதால் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் மூளையை சுறுசுறுப்பாக்கும் வகையில் உள்ளரங்க விளையாட்டுகளான குறுக்கெழுத்து, சுடோகோ வார்த்தை விளையாட்டுகளில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏற்கனவே பிப்ரவரி மாதம் அனைத்து திங்கட்கிழமைகளில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் மாதம் பள்ளி வேலைநாட்களில் தினமும் 10 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதுடன், அதில் மாணவர்கள் அனைவரும் பங்கெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி மக்கள் தொலைக்காட்சி